Tuesday, January 15, 2008

பரஸ்பரநிதி (Mutual Fund) மூலம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு!

இந்திய, வெளிநாடுவாழ் இந்திய (NRI) மற்றும் இந்திய வம்சாவழியினருக்கு (PIO)

பரஸ்பரநிதி (Mutual Fund) மூலம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு!

இனிய வணக்கம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள். புதிய வருடம் உங்களுக்கு எல்லா இன்பத்தையும், வளங்களையும் வழங்கட்டும. "தைப்பிறந்தால் வழிபிறக்கும்" என்ற பெரியோர் வாக்கு வெறும் வாழ்த்தாக மட்டும் இல்லாமல், உங்கள் செல்வத்தை சேர்க்க, வளர்க்க, பாதுகாக்க, எனக்குத் தெரிந்ததை, நான் இதுவரை கற்றவற்றை, அனுபவத்தை ஒரு நண்பணாக உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு இந்த மடல்.

பரஸ்பரநிதி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) பற்றிய அறிமுகம்தான் இது. நாம் பொதுவாக செய்யும் முதலீடு: தங்கம், வீடு/நிலம், வங்கி/அஞ்சலக வைப்பு நிதி (Fixed Deposit) போன்றவைகள்தான்.

இதில் தங்கம்தான் நம்மில் பலர் செய்யும் முதலீடு என்றாலும், இப்போது விற்கும் விலையில் (கடந்த 27 வருடங்களில் கிட்டத்தட்ட உச்சபட்ச விலை) தங்கம் வாங்கும் (நி)விலையில் இல்லை. அதிலும், தங்கத்தை நாம் ஆபரணங்களாகவே பார்க்கிறோம். அதனால் தங்கத்துக்கு கொடுக்கும் மதிப்போடு, செய்கூலி, சேதாரம், கற்கள் என்று அதிக விலை கொடுத்து வாங்குகின்றோம். அதிலும் வாங்கிய சிலவருடங்களில் பழைய ஃபேஷன் என்ற பெயரில் அதை மாற்ற/அழித்துச் செய்ய மீண்டும் செலவு. வெகுசிலரே இதிலிருந்து மாறுபட்டு நகைகளாக அதிகம் இல்லாமல், தங்க நாணயமாகவோ, தங்கக்கட்டிளாகவோ (gold bars) முதலீடு செய்கின்றனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, தங்கத்தை வைத்திருந்து காப்பாற்றுவது பெரிய விஷயமாக இருக்கிறது.

அடுத்து வீடு/நிலம் தொடர்பான சொத்துக்கள். இப்போதிருக்கும் சூழ்நிலையில் பலருக்கு கனவாகவும், சிலருக்கு வாழ்நாள் சாதனையாகவும் இருக்கிறது. இதையும் மீறி வெகுசிலரே வெற்றிகரமாக இதில் முதலீடு செய்ய முடிந்திருக்கிறது,. இதிலும் இப்போது வில்லங்கமில்லாமல் சொத்து வாங்குது, வாங்கிய சொத்தை பாதுகாப்பது அரிதாக இருக்கிறது..

இன்னும் நம்மில் பலருக்கு முதலீடு என்பது பெரியவிஷயமாகவே இருந்து வருகிறது. நமது வசதிக்கேற்ப சில ஆயிரங்களில் (ஏன் மாதாமாதம் ரூ.50 கூட) மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்து பின்னர், சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்தப் பணத்தை, பெரிய அளவிளான முதலீடு/தேவைகளுக்குப் பயன் படுத்த இயலும். பங்குச்சந்தை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து 40%க்கு மேல் வருமானம் அளித்திருந்தாலும் அதில் பொதுமக்களின் முதலீடு 6.3% என்ற அளவுதான்!

மாதாமாதம் ஆயிரம் ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கும், தங்கம் அல்லது வங்கி வைப்புநிதியில் முதலீடு செய்வதற்குமான ஒரு ஒப்பீடு கீழே.

முதலீட்டுக்காலம்

முதலீடு (ரூ.)

வைப்பு நிதி (ரூ)

தங்கம் (ரூ)

பங்குச்சந்தை (ரூ)

5 வருடங்கள்

60,000

69,393

99,080

141,790

10 வருடங்கள்

120,000

174,495

222,893

311,032

15 வருடங்கள்

180,000

357,569

322,968

532,467

20 வருடங்கள்

240,000

667.431

415,269

1,525,423

25 வருடங்கள்

300,000

1,159,971

515,986

3,902,159

உதாராணத்துக்கு, வருடத்துக்கு 12000 அல்லது 5 வருடத்தில் ரூ. 60,000 வைப்புநிதியில் முதலிட்டால் 69,393 அல்லது தங்கத்தில் முதலிட 99,080-ஆகவும், அதே 60000 பங்குச்சந்தையில் முதலிட ரூ. 141,790 ஆகிறது என ஒரு கணக்கு சொல்கிறது.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது லாபகரமானதுதான். ஆனால் பங்குவிலை சந்தை நிலவரத்துக்கேற்ப ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதால் ஒரு பாதுகாப்பற்ற முதலீடாகவே வகைப்படுத்தப்படுகிறது என்ற நிலையில்:
  • பங்குச்சந்தையில் அனுபவமுள்ள நிறுவனங்கள்/நிதி நிர்வாகிகள் மூலம் நாம் முதலீடு செய்யமுடிந்தால்,

  • தங்கம், வீடு/நிலம் அல்லது வைப்பு நிதி போன்றல்லாமல், நமது தேவைக்கேற்ப, வருமானத்துகேற்ப முதலீடு செய்யும் வாய்ப்பிருந்தால்

  • நினைத்தநேரம் வாங்க/விற்க முடியும் வாய்ப்பிருந்தால்

  • வயது, முதலீடு, எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கிற லாபம் என்று அத்தனை விஷயங்களையும் கண கச்சிதமாக முன்பே அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்ய முடிந்தால்,

  • கையைச் சுட்டுக் கொள்ளாமல் அதேசமயம் கணிசமாகச் சம்பாதிக்கும் தாரக மந்திரம் தெரிந்தால்,

  • நம்முடைய முதலீடு ஒரு சிலவருடங்களில் இருமடங்காகும் வாய்ப்பிருந்தால்,

முயற்சி செய்வோம்தானே! ஆம், பரஸ்பரநிதி அளிக்கும் வாய்ப்புகள்தான் மேலே உள்ளவை.
  • நீங்கள் வருமானவரி விலக்குக்காக (Tax Relief) முதலீடு செய்ய நினைத்தாலும் (ELSS Funds),

  • வைப்புநிதியை விட அதிக வளர்ச்சி இருக்கவேண்டும் ஆனால் பாதுகாப்பானதாக வேண்டும் என்றாலும் (Debt Funds),

  • மொத்தமாக‌ ஒரு தொகை முதலிட்டு விட்டு, மாதாமாதம் ஒரு தொகை கிடைக்குமா என்ற வகையாயிருந்தாலும்(MIP),

  • ஓரளவு இழப்பு வந்தால்கூட பரவாயில்லை, ஆனால் முடிந்தவரை நல்ல லாபம் வேண்டும் என்றாலும்(Diversified Equity Schemes),

  • மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது 3, 6 மாதத்துக்கு ஒருமுறை உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து தானாக முத‌லீடுசெய்ய நினைத்தாலும் (Systematic Investment Plan – SIP தொடர்முதலீடு)

  • எனக்கு அடுத்த 3 வருடத்துக்கு இந்தப்பணம் தேவைப்படாது ஆனால் நல்ல லாபம் எதிர்பார்ப்பேன் என்றாலும்(Closed End Funds),

  • நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுபோல், எனக்கு வங்கி சார்ந்த பங்குத்திட்டம், கட்டுமானத்துறை, உள்கட்டமைப்பு நிறுவனப் பங்குகள், தகவல்தொழில்நுட்ப பங்குகள் என குறிப்பிட்ட துறை/பிரிவு சார்ந்த அதிக‌ரிஸ்க் அதேநேரம் மிதமிஞ்சிய வருமானம் என்ற துணிச்சல்காரராய் இருந்ந்தாலும் (Thematic/Sector Funds – Banking, Infrastructure, IT, Energy, Power Sector, FMCG, Pharma etc.)

  • பங்குச்சந்தைக் குறியீட்டின் ஆதாரமாக இருக்கும் நிறுவனங்களில் மட்டும் முதலிட நினைத்தாலும் (Index Funds),

  • தங்கத்தை வாங்கி பாதுகாப்பதற்குப் பதில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் தேவை என்றாலும் (Gold ETF)

உங்கள் முதலீட்டுத்தேவை இதுபோன்று எதுவாக இரு‍ந்தாலும் உங்களுக்கு பரஸ்பரநிதியில் ஒரு தீர்வு/திட்டம் உண்டு.

பரஸ்பரநிதி என்றால் என்ன? எப்படி அது லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறது? எது நல்ல பரஸ்பரநிதி? பரஸ்பரநிதியில் முதலீடு செய்தால் நஷ்டம் வரவே வராதா? இதுவும் பங்குச் சந்தைதானாமே? ஆயிரம் கேள்விகள். அதைவிட அதிகக் குழப்பங்கள் இருக்கலாம். கவலையை விடுங்கள்.

  • பதிவுபெற்ற பரஸ்பரநிதி ஆலோசகராக, விநியோகிப்பாளராக அதற்கும் மேல் சக முதலீட்டாளராக உங்களுக்குக் கைகொடுக்க,

  • என்னுடைய முதலீட்டு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள,

  • ப‌ரஸ்பரநிதி உலகை உங்களுக்கு மேலும் அறிமுகம் செய்ய‌, அதற்குரிய கடவுச்சீட்டான பான் கார்டுக்கு விண்ணப்பிக்க‌

  • உஙகள் வயது, சூழ்நிலை, வருமானம், வசதி, குடும்பம், முதலீடு செய்யவிரும்பும் காலம் என்ற நிலை அறிந்து உங்களுக்கேற்ற திட்டத்தை அறிமுகப்படுத்த‌

  • உங்களுடைய முதலீட்டு நிலையை தொடர்ந்து கவனித்து தகவல் அளிக்க‌

  • தொடர்ந்து உங்கள் முதலீட்டுத் தேவைகளுக்கு (வாங்க/விற்க‌) உதவ‌

  • சந்தை நிலவரம் தெரிவிக்க, புதிய திட்டங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய‌

நீண்டகால நண்பனாக உங்கள் நிதித்திட்டமிடலில் பங்குபெற‌ நான் தயார், நீங்களும்தானே!

உங்கள் உழைப்பில் வந்த‌ பணம் இனி உங்களுக்கு உழைக்கட்டும்.
வாருங்கள் இந்தியாவில் முதலிட்டு இந்தியாவோடு வளர்வோம்
!

என்றென்றும் அன்புடன்,
அன்பு

குறிப்பு:

  • தற்போது ரிலையன்ஸ், சுந்தரம் பிஎன்பி, கனரா ரொபெகோ, லோட்டஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் திட்டங்களை வழங்குகின்றோம். மற்ற நிறுவனங்களின் திட்டங்கள் விரைவில்.

  • விநியோகிப்பாளர்/முகவர் மூலம் செய்யப்படும் முதலீ்டுகளுக்கு, திட்டத்துக்கு ஏற்ப நிறுவனங்களின் நுழைவு/வெளியேறு கட்டணம் (Entry/Exit Load) உண்டு.

  • ஒரு ஒப்பீட்டுக்காக பிரிவு வாரியாக சராசரி வளர்ச்சிவிகிதமும், நாங்கள் விநியோகிக்கும் திட்டங்களின் பலன்களும் கடைசிப்பக்கத்தில் அளித்திருக்கிறோம்.

  • பரஸ்பரநிதி முதலீடுகள் சந்தை நிலவரத்தைப்பொருத்தது. பங்குச்சந்தை தொடர்பான மற்ற முதலீடுக‌ள் போலவே பரஸ்பரநிதியின் வருமானமும் ஏற்ற, இறக்கத்துக்குட்பட்டது. முந்தைய வருட செயல்பாடுகள், வருங்காலத்துக்கு உத்தரவாதமாக எடுத்துக்கொள்ள இயலாது.

5 comments:

S. Ramanathan said...

பரஸ்பர நிதி பற்றி தமிழில் இவ்வளவு விவரமான பதிவு இருப்பதே தெரியாமல் போய்விட்டது! நல்ல விவரங்கள் கொண்ட பதிப்பு.

தங்கம், வைப்பு நிதி மற்றும் பங்கு சந்தை பற்றிய ஒப்பீட்டில் ஒரு சந்தேகம். இது எந்த வருடத்திலிருந்து தொடங்கப்பட்ட ஒப்பீடு. 25 வருடங்களில், தங்கத்தின் வளர்ச்சி வைப்பு நிதியின் வளர்ச்சியை விட குறைவாக இருப்பது சந்தேகமாக இருக்கிறது. இதில் வைப்பு நிதியின் வட்டி விகிதமாக எவ்வளவு சதவீதம் கணக்கின் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது? நேரம் கிடைக்கும்பொழுது விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Anbu(parasparfund@gmail.com) said...

மிக்க நன்றி நண்பரே.
குறிப்பாக உங்கள் சந்தேகத்துக்கு... அதன் ஆங்கிலமூலத்தை தேடிக்கொண்டிருக்கிறேன், பின்னர் தெரியப்படுத்துகின்றேன்.

butterfly Surya said...

நல்ல விவரங்கள் கொண்ட பதிப்பு

kannan said...

Hi Anbu,

Nice post.Very detailed.
Do you have any idea that a person working in USA can invest via online.ICICI has online investment but not for USA, which is so weird.
Please let me know if any bank offers this kind of service for USA.

Thanks,
Kannan Viswagandhi
http://www.growing-self.blogspot.com

அன்பு said...

வணக்கம் கண்ணன்.
இந்தியப் பங்குச்சந்தையில் நேரடி முதலீடாக இல்லாமல், பரஸ்பர்நிதி மூலம் நீங்கள் முதலீடு செய்ய முடியும் (ஒரு சில நிறுவன/நிதி தவிர).

இப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு் உள் நுழைவு கட்டணம் தளர்த்தப்பட்டுவிட்டதால், நீங்கள் ஐசிஐசிஐ டேரக்ட் மற்றும் வங்கிகள்/நிதிநிறுவனங்கள் அளிக்கும் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்துவதை விட, சம்பந்தப்பட்ட் பரஸ்பரநிதியின் இணையத்தளங்கள் வழியாக வாங்குவதே அதிக பயன் தரும் (தனித்தனி நிறுவனங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கும் சிரமம் தவிர!).

இப்போது பெரும்பாலான் நிறுவனங்கள் அந்த வசதியைக் கொடுக்கின்றனர். ஐசிஐசிஐ/ஹெடிஎஃசி போன்ற வங்கிளில் உங்களின் கணக்கு இருக்கும்பட்சத்தில் நெட்பேங்கிங்க் வழி இதை செய்யமுடியும்.

இந்த வசதி பெறுவதற்கு முதல் முறை, தேவையான படிவஙகளை அனுப்பி முதலீடு செய்யவேண்டும். அப்போது இணைய கணக்குக்கு விண்ணப்பித்தால்... பின்னர் அதே நிறுவனத்தின் மேல்முதலீட்டுக்கு (மற்ற திட்டங்களாக இருந்தாலும்) இணையம் வழியாகவே செய்ய இயலும்.

மேலும், நேரடி பங்குச்சந்தை முதலீடுகள் போலல்லாமல் வருடத்தில் வெகு சில பரிவர்த்தனைகளே நடைமுறைச் சாத்தியம் என்பதால் பெரும்பாலும், மியூச்சுவல் ஃபண்டில் இணையப்பரிவர்த்தனை அதிக அவசியமில்லை. தபால்வழியாக‌ எளிதாக செய்ய இயலும்.

இதுதொடர்பான மேல்விபரங்களுக்கும், சிறப்பான திட்டங்கள், முதல்முறை முதலீடு செய்ய தேவையான படிவங்கள் மற்றும் விபரங்க‌ளுக்கு என்னை தொடர்புகொள்ளவும்.

அன்புடன்,
அன்பு
parasparfund@gmail.com
lsanbu@gmail.com