Saturday, October 20, 2007

மியூச்சுவல் ஃபண்ட் பணம் போடுவது எப்படி?

நன்றி: நாணயம் விகடன்

அட இவ்வளவுதானா! பேங்க்கில் போடுவதை விட அதிக லாபம், ஷேர் மார்க்கெட்டில் போடுவதை விட குறைவான ரிஸ்க் என்பதால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் ஃபண்டில் பணம் போட விருப்பம் இருந்தும் எப்படிப் போடுவது என்பது தெரியாமல் கைபிசைந்து நிற்பவர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது.

போஸ்ட் ஆபீஸில் போய் சேமிப்புக் கணக்கில் பணம் போடுவதைப் போலத்தான் மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதும். இன்னும் சொல்லப்போனால், அஞ்சலக சேமிப்பு என்றால், நாம் தேடிப் போகவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு ஆட்கள் நம்மைத் தேடி வருவார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அடிப்படை தகவல் களோடுதான் அந்த முதலீட்டுக்கு தயாராகி இருப்பீர்கள். அதனால், நாம் நேரடியாக அடுத்தகட்டத்துக்குப் போய்விடலாம்.

எந்த வகையான முதலீடு என்றாலும் பான்கார்டு முக்கியம். அதனால் பான்கார்டு குறித்த விவரங் களோடு மியூச்சுவல் ஃபண்டுக்காகவே உள்ள ஏஜென்டைத் தொடர்புகொள்ள வேண்டும். பெரும் பாலும் பங்குத் தரகர்களே மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென் டாகவும் இருப்பார்கள். பான்கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்ப நகலை வைத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இறங்கிவிடலாம். கார்டு வந்ததும், அதன் எண்ணை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குச் சொன்னால் போதும்.

ஏற்கெனவே சந்தையில் இயங்கிவரும் திட் டங்கள் என்றாலும் புதிய வெளியீடுகளாக இருந் தாலும் பத்திரிகை, டி.வி. மூலம் அறிந்துகொள்ளலாம். அதை வைத்து எதில் முதலீடு செய்வது என்று முடிவு செய்திருப்பீர்கள். அடுத்தகட்டமாக ஏஜென்ட் அல்லது விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், பணத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்ய உதவுவார்கள்.

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் விதவிதமான திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு ஏற்றது குறுகியகால முதலீடா? அல்லது நீண்டகால முதலீடா? தொடர்ந்து வருமானம் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தேவையா? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியும் போன்ற வற்றைக் கவனித்து அதற்கு ஏற்ப திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வழங்கு பத்திரம் (Offer Document) மிக முக்கியமானது. அதில் பல பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதனை முழுமையாகப் படித்துப் பார்ப்பது நல்லது. அதில் திட்டத்தின் தன்மை, ரிஸ்க் காரணிகள், திட்டத்துக்கான செலவு விவரங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை நடத்தும் நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள், ஃபண்ட் மேனேஜரின் கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம், மியூச்சுவல் ஃபண்ட நிறுவனத்தின் இதர திட்டங்களின் செயல்பாடுகள், நிறுவனத்தின் மீது நிலுவையிலுள்ள வழக்குகள், விதிக்கப்பட்ட அபராதம் போன்றவை இடம் பெற்றிருக்கும். வழங்கு பத்திரத்தின் ஒரு பகுதியாக விண்ணப்பப் படிவம் இருக்கும். அதில் முதலீட்டாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இதனைத் தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, நாமினி நியமனம்.

திட்டத் தேர்வு முடிந்ததும், ஒரே நேரத்தில் மொத்த முதலீடா அல்லது மாதம் தோறும் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். எனவே, அதற்கான முன் ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

காசோலை அல்லது டிராஃப்டின் பின்புறம் உங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுப்பது நல்லது. எஸ்.ஐ.பி. முறை என்றால் முதல் மாதத்துக்கு மட்டும் காசோலை கொடுத்தால் போதும். அடுத்தடுத்த மாதங்களில், குறிப்பிட்ட தேதியில் இ.சி.எஸ். முறையில் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கெனவே இயங்கி வரும் திட்டம் என்றால் முதலீடு செய்த 3 அல்லது 4 நாட்களில் யூனிட்கள் ஒதுக்கப்பட்ட விவரம், அக்கவுன்ட் ஸ்டேட்மென்டாக தபாலில் அனுப்பி வைக்கப்படும். இ-மெயில் மூலமும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

என்.எஃப்.ஓ. என்றால் அது நிறைவு பெற்ற 30-40 நாட்களுக்குள் யூனிட்கள் ஒதுக்கப்பட்ட விவரம் வரும். இந்த ஸ்டேட்மென்ட் வந்ததும் அதில் முதலீட்டு தொகை, உங்களின் பெயர், திட்டத்தின் பெயர், வாரிசு நியமனம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதாவது விவரங்கள், தவறுதலாக இடம் பெற்றிருந்தால், மியூச்சுவல் நிறுவனத்தின் கிளை, அல்லது அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் எழுத்து மூலம் தெரிவித்து சரிசெய்து கொள்ள வேண்டும்.

உங்களின் முழு முதலீட்டுத் தொகைக்கும் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யமாட்டார்கள். நுழைவுக் கட்டணம் (Entry Load) 2.5% முதலீட்டுத் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். உதாரணத்துக்கு ஒருவர், என்.எஃப்.ஓ-வில் (10 ரூபாய் முக மதிப்பு, 2.5% நுழைவுக் கட்டணம்) ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அவருக்கு 10 ஆயிரம் யூனிட்களுக்கு பதில் 9,750 யூனிட்கள்தான் கிடைக்கும்.

உங்களின் யூனிட்களின் வளர்ச்சியை முதலீட்டு இதழ்கள், ஆம்ஃபியின் இணைய தளம் போன்றவற்றில் கவனித்து வருவது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த ரிட்டர்ன் கிடைத்ததும் யூனிட்ளை விற்றுவிடலாம் அல்லது விரும்பினால் முதலீட்டைத் தொடரலாம்.

அக்கவுன்ட் ஸ்டேட்மென்டின் கீழ் பகுதியில், கூடுதலாக யூனிட்கள் வாங்க, யூனிட்களை விற்றுப் பணம் பெற, வங்கி கணக்கு மற்றும், முகவரி மாற்றத்தை தெரிவிக்க ஸ்லிப்கள் (Slips) இருக்கும். அதை நிரப்பி யூனிட்களை விற்கலாம். யூனிட்டின் என்.ஏ.வி. மதிப்பின் அடிப்படையில் பணம் தரப்படும். இதற்கான காசோலையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் சில தினங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபாலிலும் பெறமுடியும். அத்தொகையை உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வசதியும் இருக்கிறது. வெளியேறும் கட்டணம் இருக்கும்பட்சத்தில் அது கழிக்கப்பட்டு மீதித் தொகை தரப்படும்.

டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வழங்கப்படும். அத் தொகைக்கு வரி எதுவும் கிடையாது. இதை முதலீட் டாளர் விரும்பும் விதத்தில் காசோலை அல்லது இ.சி.எஸ். முறையில் பெற்றுக்கொள்ளலாம்.

இனி ஏன் தயக்கம், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியதுதானே?

-
எஸ்.ரம்யசினேகா, நன்றி: நாணயம் விகடன்

எதில் முதலீடு செய்வது - நிதி திட்டமிடல்!

நன்றி: குமுதம்.காம்

இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும், கை நிறையச் சம்பாதிப்பது உற்சாகம் தரும் உண்மை. நிறையச் சம்பாதித்தால் மட்டும் போதுமா? நமக்குக் கிடைக்கும் வருமானத்தில் பத்து முதல் இருபது சதவிகித பணத்தைச் சேமித்து வைக்க வேண்டாமா?

''சேமிப்பின் அவசியம் பற்றியும், சேமித்த பணத்தை எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது குறித்தும் மிகச் சில இளைஞர்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள். டி.வி.டி, ஐபாட், கேமிரா, செல்போன் என்று தேவைப்படுகிறதோ, இல்லையோ ஏதாவது ஒரு பொருளை மாதம் ஒன்று வாங்குகிறார்கள் இளைஞர்கள். கேட்டால், கிரிடிட் கார்டு இருக்க பயமேன்? என்கிறார்கள். அவசியமான பொருளை மட்டும் பணம் கொடுத்து வாங்கி, மீதமுள்ள பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்தால், பிற்காலத்தில் மிகவும் பயன்படும்'' என்கிறார் நிதி நிர்வாக ஆலோசகரான பாலகிருஷ்ணன்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள், மாதாமாதம் சேமிக்கும் பணத்தை எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று சொல்கிறார் அவர்.

''முதலீடு செய்வதில் ஒவ்வொரு வயதுக்காரர்களுக்கும் ஒரு ஃபார்முலா உண்டு.

25 வயது 40 வயதுக்காரர்கள் ஒரு வகை; 40 முதல் 60 வயதுக்காரர்கள் இன்னொரு வகை; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு வகை எனச் சம்பாதிக்கிறவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இனி, முதல் வகையினரைப் பார்ப்போம். எதைப் பார்த்தாலும், 'வாடா மச்சான், ஒரு கை பார்த்துரலாம்' என்று மார்தட்டும் காலம் இது. உடம்பில் நிறைய பலம் இருக்கிறது. வயதும் இருக்கிறது என்பதால், எந்த 'ரிஸ்க்'கையும் எடுக்கக்கூடிய தைரியம் இவர்களிடம் உண்டு. எனவே, கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை; நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த வயதுக்காரர்கள் இருப்பார்கள்.

இவர்கள் தாங்கள் சேமித்து வைத்த பணத்தில் ஐம்பது சதவிகிதத்தை மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து, மியூச்சுவல் ஃபண்ட்டின் வளர்ச்சியும் இருக்கும். தனிப்பட்ட முறையில் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது நல்லது. மியூச்சுவல் ஃபண்ட்டில் நாம் முதலீடு செய்யும் பணம் அதிகபட்சமாக முப்பது சதவிகிதம் வரை நஷ்டமடைய வாய்ப்புண்டு. என்றாலும், 60 முதல் 70 சதவிகிதம் லாபம் தரக்கூடியது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால் நாம் போட்ட பணம் இரண்டு மடங்காகப் பெருகும் வாய்ப்பும் உண்டு.

அடுத்து, இருபது சதவிகித பணத்தை வருமான வரி விலக்களிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஒன்று, வரி கட்டுவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். இரண்டாவது, ஆறு ஆண்டுகளுக்குள் அறுபது சதவிகிதம் பணம் பெருகும். உதாரணமாக, பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் என்.எஸ்.சி.யில் போட்டு வைத்தால், ஆறே வருஷத்தில் பதினாறாயிரமாக மாறிவிடும்.

ஆறு வருஷம் காத்திருக்க விருப்பமில்லாதவர்கள் இ.எல்.எஸ்.எஸ் என்கிற திட்டத்தில் மாதாமாதம் ஆயிரம் ரூபாயோ, இரண்டாயிரம் ரூபாயோ போடலாம். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் கணிசமான லாபத்தைத் தரும்.

மூன்றாவதாக, உங்கள் சேமிப்பில் பதினைந்து சதவிகிதத்தை இன்ஷூரன்ஸ் செய்யுங்கள். பிற்காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் செய்வது அவசியத்திலும் அவசியம். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் எண்டோமென்ட் திட்டம் அல்லது ஐந்து, பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பணம் கிடைக்கும் மணிபேக் பாலிசி என்று ஏதாவது ஒரு திட்டத்தில் பணம் போடலாம்.

அடுத்து, ஒரு ஐந்து சதவிகித பணத்தை 'மெடிகிளைம்' பாலிசியில் போடலாம். இப்போதெல்லாம் சர்க்கரை நோயில் ஆரம்பித்து ஹார்ட் அட்டாக் வரையிலான பல வித நோய்கள் வருகின்றன. இந்த நோய்களுக்கான சிகிச்சை செலவை 'மெடிகிளைம்' பாலிசியிலிருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமக்குப் போய் எதுவும் வரவில்லை என்றால் நாம் கட்டிய பணம் கிடைக்காது. ஆனால் மெடிகிளாமில் சில ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் போதும் லட்ச ரூபாய் வரை செலவுகளைத் தவிர்க்கலாம்.

கடைசியாக, ஒரு பத்து சதவிகித பணத்தை பி.பி.எப். திட்டத்தில் முதலீடு செய்தால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அது மிகச் சிறந்த வருமானத்தைக் கொடுக்கும்.

நாற்பது முதல் அறுபது வயதுள்ளவர்கள் ரிட்டயர்ட்மெண்ட் நோக்கிச் செல்பவர்கள். மிக விரைவில் மாத வருமானத்தை இழக்கப் போகிறவர்கள் என்பதால், எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படுத்தாத திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது அவசியம்.

இந்த வயதில் இருப்பவர்கள் முப்பது சதவிகித பணத்தை மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் போடலாம். பத்து சதவிகித பணத்தை வரிச்சலுகை அளிக்கும் திட்டங்களிலும், இருபது சதவிகித பணத்தை ஆர்.டி. மற்றும் மாதாமாதம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானிலும் போடலாம்.

இது தவிர, பத்து சதவிகித பணத்தை இன்ஷூரன்ஸிலும், பத்து சதவிகித பணத்தை பி.பி.எஃப். திட்டத்திலும் போடலாம். கடைசியில் மீதமிருக்கிற இருபது சதவிகித பணத்தை போஸ்ட் ஆபீஸிலோ அல்லது வங்கியிலோ ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டு வைக்கலாம். எதிர்பாராமல் செலவு ஏதும் வந்தால், இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், கவர்ச்சியான வட்டியும் கிடைக்கும்.

அறுபது வயதுக்கு மேலே உள்ளவர்களில் பலர், எந்த வருமானமும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். எனவே, இவர்களிடம் உள்ள பணம் ஒரு பைசாகூட இழக்காத படிக்கு முதலீடு இருக்க வேண்டும். எனவே, இந்த வயதுக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தில் எழுபது சதவிகிதத்தை, மாதாமாதம் வருமானம் தரக்கூடிய அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து வைப்ப அவசியம்.

அடுத்து இருபது சதவிகிதத்தை வருமானவரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ். போன்ற திட்டத்திலும், என்.எஸ்.சி. திட்டத்திலும் முதலீடு செய்யலாம். பத்தே பத்து சதவிகித பணத்தை மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் போடலாம்.

இது ஒரு பொதுவான ஃபார்முலாதான். நஷ்டத்தைக் குறைத்து, அதிக அளவில் லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனில், விஷயம் தெரிந்த நிதி நிர்வாக ஆலோசகர்களுடன் கலந்தாலோசியுங்கள்'' என்கிறார் பாலகிருஷ்ணன்.

நிபுணர் யோசனை சொல்லிவிட்டார். இனி முதலீடு செய்ய வேண்டியது உங்கள் வேலைதான்.

நன்றி: குமுதம்.காம்

பரஸ்பரநிதி - ஒரு எளிய அறிமுகம்

நன்றி: குமுதம்.காம்

தமிழ்நாட்டில் இப்போது ஷேர் மார்க்கெட்டுக்கு அடுத்து பிரபலமடைந்து வரும் விஷயம் மியூச்சுவல் ஃபண்ட். வங்கி டெபாசிட்டுகளில் நீங்கள் போடும் பணம் பத்திரமாக இருப்பது போல, மியூச்சுவல் ஃபண்டிலும் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பத்திரமாக இருக்கும். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய், இரண்டு லட்சமாக மாற்றிவிடும் வல்லமையும் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கு உண்டு.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரமான மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் நிதி நிர்வாக ஆலோசகரான சுவாமிநாதன்.

''மியூச்சுவல் பண்ட் பற்றிப் புரிந்துகொள்வது மிக மிகச் சுலபம். தனிப்பட்ட முறையில் ஒருவர் பங்குச்சந்தையில் (ஷேர் மார்க்கெட்டில்) முதலீடு செய்வதைவிட, பலரிடமும் பணத்தை வாங்கி, நன்கு விஷயம் தெரிந்த ஒருவர் மூலமாக பங்குச் சந்தையிலும், மற்ற பல விஷயங்களிலும் முதலீடு செய்வதுதான் மியூச்சுவல் பண்ட்.

நீங்கள் கொடுக்கும் பணம் பெருமளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு 'ஈக்விட்டி ஃபண்ட்' (Equity fund) என்று பெயர். பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பெரிய நிறுவனங்கள் நடத்தும் கடன் பத்திரத்தை வாங்கினால் அதற்கு 'டெப்ட் ஃபண்ட்' (Debt fund) என்று பெயர்.

நீங்கள் வாங்கும் மியூச்சுவல் ஃபண்ட் இந்த இரண்டில் எதில் வரும் என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள். அல்லது அந்த மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அந்த கம்பெனி கொடுக்கும் கையேட்டில் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.

இந்த இரண்டு ஃபண்ட்டில் எது நல்லது என்று கேட்டால் பதில் சொல்வது மிக மிகக் கடினம். சில சமயம் 'ஈக்விட்டி ஃபண்ட்' நல்ல லாபம் தரும். அப்போது அதில் பணத்தைப் போடுவதுதான் சரி. இன்னும் சில நேரத்தில் பங்குச்சந்தை மோசமாக இருக்கும். அப்போது 'டெப்ட் ஃபண்ட்'டில் பணத்தைப் போடலாம்.

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் 'ஈக்விட்டி ஃபண்ட்'டை நீங்கள் வாங்குவதாக இருந்தால் மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தையில் பல ஆயிரம் பங்குகள் உண்டு. இதில் வங்கி சம்பந்தப்பட்ட பங்குகள், கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பங்குகள், தகவல் தொழில் சார்ந்த பங்குகள், மருந்து கம்பெனிகள் என்று துறை வாரியாகப் பார்த்து பணத்தை முதலீடு செய்வதை 'செக்டார் ஃபண்ட்' (Sector fund) என்று சொல்வார்கள். குறிப்பிட்ட ஒரு துறை சம்பந்தப்பட்ட பங்குகளை மட்டும் வாங்காமல் பல துறை சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்குவதை 'டைவர்சிஸிபட் ஃபண்ட்' (diversified fund) என்பார்கள்.

இந்த இரண்டில் எந்தப் பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரி விடை எதுவும் இல்லை. இரண்டிலும் சாதகமான, பாதகமான விஷயங்கள் உண்டு. நாம் நினைத்தபடியே மருந்துத்துறை நன்கு வளர்ச்சி அடைந்தால், நமக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்படி இல்லாமல் மருந்துத்துறை படுத்துவிட்டால் நஷ்டம் ஏற்பட்டு, நீங்கள் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

டைவர்சிஸிபட் ஃபண்ட்டில் முதலீடு செய்தால் ஒரு கம்பெனி பங்கு படுத்தாலும் இன்னொரு கம்பெனி பங்கு திறமையாகச் செயல்பட்டு, நம் நஷ்டத்தைக் குறைக்கும். எனவே, ஓரளவுக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செக்டார் ஃபண்டையும், மற்றவர்கள் டைவர்சிபைட் ஃபண்டையும் வாங்கலாம்.

இந்த இரண்டைத் தவிர சமீபகாலமாக, மல்ட்டி கேப் என்கிற ஒன்றும் புதிதாக வந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட துறையின் பங்கை வாங்காமல் பெரிய, நடுத்திர, சிறிய என்று எல்லா கம்பெனிகளின் ஷேர்களையும் வாங்குவதற்கு 'மல்ட்டி கேப்' என்று பெயர். இப்போது 'மல்ட்டி கேப்'பும் மிக சிறந்த லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயங்களைக் கவனித்து முடித்தபிறகு, நீங்கள் வாங்கப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் ஓப்பன் எண்ட் ஸ்கீமா, அல்லது குளோஸ்ட் எண்ட் ஸ்கீமா என்பதைப் பாருங்கள். 'ஓப்பன் எண்ட் ஸ்கீம்' என்பது ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். விற்கலாம். ஆனால் 'குளோஸ்ட் எண்ட் ஸ்கீம்' என்பது குறிப்பிட்ட ஒரு நேரத்தில்தான் அந்த ஃபண்ட்டை வாங்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் விற்க முடியும். மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் எனக்கு இந்த பணமே வேண்டாம் என்று நினைப்பவர்கள் குளோஸ்ட் எண்ட் ஸ்கீமில் தாராளமா பணத்தைப் போடலாம். எப்போது வேண்டுமானாலும் ஃபண்ட்டை விற்றுவிட்டு வெளியே வர நினைப்பவர்கள் ஓப்பன் எண்ட் ஸ்கீம் ஃபண்ட்டுகளை வாங்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும் முன்பு, இந்தத் துறையில் கற்றுத் தேர்ந்த ஒரு நிபுணரின் ஆலோசனையின் படி பணத்தை முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு கம்பெனியின் மியூச்சுவல் பண்ட் பற்றி நீங்களே தெரிந்துகொள்ள வேண்டும் எனில் அந்தந்த கம்பெனி நடத்தும் இணைய தளத்தில் போய்ப் பார்த்தால் உங்களுக்கு வேண்டிய எல்லாத் தகவல்களும் கிடைக்கும். உதாரணமாக, ரிலையன்ஸ் கம்பெனி நடத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளை நீங்கள் வாங்க ஆசைப்பட்டால், அந்தக் கம்பெனி நடத்தும் இணைய தளத்துக்குள் சென்று பாருங்கள். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் எவ்வளவு லாபம் தந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும் எனில் valueresearch.com என்கிற இணைய தளத்துக்குச் சென்று பாருங்கள்.

ஒரு முறை, ஒரே ஒரு முறை மியூச்சுவல் ஃபண்ட்டில் ஐந்தாயிரம் ரூபாயை முதலீடு செய்தால், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அத்தனை விஷயங்களும் உங்களுக்கு அத்துப்படியாகிவிடும்'' என்கிறார் சுவாமிநாதன்.

பெஸ்ட் ஆஃப் லக்!

நன்றி: குமுதம்.காம்

திட்டத்தின் நோக்கத்தைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்.

நன்றி: குமுதம்.காம்

குரோத் ஸ்கீம்ஸ்

இந்தவகைத் திட்டம், முதலீடு செய்யப்படும் பணத்தின் வளர்ச்சியை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டது. இதனால் இதை வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள். இவ்வகைத் திட்டங்களில் திரட்டப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குகளில் அல்லது அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் முதலீடு நடுத்தர மற்றும் நீண்ட கால நோக்கில் நல்ல வளர்ச்சியைக் காட்ட வேண்டும்; சிறப்பான லாபத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதால், இடையில் சிலகாலம் இந்தத் யூனிட்களின் மதிப்பில் சற்றே வீழ்ச்சி இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், இந்த வகைத் திட்டத்தின் நீண்ட கால சராசரி வருவாய் பொதுவாக மற்ற எல்லா திட்டங்களின் வருவாயைவிட அதிகமாக இருக்கும். சிறப்பாகச் செயல்பட்ட இந்த வகைத் திட்டங்கள் சில, ஒரே ஆண்டில் 100 சதவிகித வளர்ச்சியைக் காட்டியதும் உண்டு. அதாவது, ஓராண்டில் இந்த திட்டத்தில் போட்ட முதலீடு இரட்டிப்பாகியுள்ளது. எனினும், இந்த மாதிரி திட்டங்களில் 'ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாகத் தர வேண்டும்' என்பதெல்லாம் சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற எதிர்பார்ப்பு உள்ள தரப்பினருக்கு இந்தத் திட்டம் ஏற்றதன்று. நீண்ட கால முதலீடாக நல்ல வருவாயைத் தருவதாக இருந்தால் போதும் என்ற மனப்போக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருத்தமான திட்டம். குறிப்பாக, இளம் மற்றும் நடுத்தர வயதில் சேமிப்பவர்கள் இந்த வகைத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகைத் திட்டங்களில் பெரும்பாலானவை தங்களது கையிருப்பில் பெரும் பகுதியை பங்குகளில் முதலீடு செய்வதால், இவற்றை பங்கு சார்ந்த திட்டங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். புரிந்து கொள்ள எளிதாக இருப்பதால், இனிவரும் பகுதிகளில் இதை பங்கு சார்ந்த திட்டங்கள் என்றே குறிப்பிடுவோம். பங்குச்சந்தை சிறப்பாகச் செயல்படும் "பூம் டைம்" அல்லது "புல் மார்க்கெட்' காலங்களில் இது சிறப்பான வருவாயைத்தந்தாலும், 'லீன்பிரியட்'அல்லது 'பியர்மார்க்கெட்'

எனப்படும் பங்குச்சந்தை சுணக்கத்தில் இருக்கும் காலங்களில் இது போட்ட முதலுக்கு மோசம் உண்டாக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, 2006ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் மிகச் சிறப்பாக இருந்த இந்த வகை திட்ட முதலீடுகள், அந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பங்குச்சந்தை கண்ட சரிவுக்கு பிறகு கடும் வீழ்ச்சியைக் கண்டு முதலீட்டாளர்களுக்கு வருவாய் இழப்பைக் காட்டின.

இன்கம் ஸ்கீம்ஸ் எனப்படும் வருவாய்த் திட்டம்

இந்த வகைத் திட்டம், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், இந்தத் திட்டத்திலிருந்து ஒரு தொகையை, வருமானமாக முதலீட்டாளருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.

இந்த கட்டாயத்தினால், இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையின் பெருமளவு_உறுதியான வருமானம் தரும் திட்டங்களான அரசு கடன் பத்திரங்கள், பாண்ட்கள் மற்றும் கம்பெனிகளின் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற வகைகயிலான வட்டி வருமானம், பொதுவாக குறைவாகத்தான் இருக்கும் என்பதால், இந்தத் திட்டங்களின் வருவாயும் பொதுவாக குறைவாகத்தான் இருக்கும். ஆனால் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி வருவாய் மற்றும் வைப்புநிதிக் கணக்கு எனப்படும் ஃபிக்ஸ்ட் டெப்பாசிட்களில் கிடைக்கும் வட்டி வருமானத்தைவிட இதில் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அத்துடன் இதன் வருவாய், பொதுவாக நாட்டில் நிலவும் நிதி புழக்கம் மற்றும் வட்டி நிலவரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் இருக்கும் அநிச்சயதன்மையை விரும்பாதவர்கள், பணி ஓய்வு பெற்று, அப்போது கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் வயதானவர்கள் போன்ற தரப்பினருக்கு இந்த வகைத் திட்டம் பொறுத்தமானது. நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் வந்து, உலக மயமாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டபின், இந்த வகை திட்டங்களின் வருவாய் இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தையும் சேர்ந்ததாக மாறிவிட்டது. 1990களின் ஆரம்ப நாட்களில் இருந்த வட்டி விகிதம் மெள்ள மெள்ள குறைந்து இப்போது ஒற்றை இலக்க வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், ஒரு கட்டத்தில் 20 30 சதவிகிதம் கூட வருவாய் தந்த இந்த வகைத் திட்டங்கள் தற்போது 15 சதவிகித வருவாய் தருவதே மிகப் பெரிய விஷயமாக மாறியுள்ளது.

பேலன்ஸ்டு ஸ்கீம்ஸ் எனப்படும் சமனத் திட்டம்.

இந்த வகைத் திட்டங்கள், மேலே சொன்ன இரண்டு வகைத் திட்டங்களின் கலப்பு திருமணத்தில் உருவானது என்று சொல்லலாம்.

அதாவது, முதலீட்டின் மீதான நீண்ட கால வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவாய் தரும் அம்சமும் முக்கியம்தான் எனக் கருதும் திட்டம் இது. அதனால் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதி பங்குகளிலும், மீதி கடன் பத்திரங்கள், பாண்ட்கள் போன்ற நிரந்தர வருவாய் தரும் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். பொதுவாக, தனது முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்க தயக்கம் உள்ள, ஆனால் முதலீட்டின் மீதான வளர்ச்சியும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்களுக்குப் பொறுத்தமான திட்டம் இது. இந்தத் திட்டங்களின் வளர்ச்சி அல்லது வருவாய் இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட மொத்த தொகையில் எத்தனை சதவிகிதம், எந்த மாதிரி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அமையும்.

லிக்விட் ஸ்கீம்ஸ் எனப்படும் உடனடித் திட்டம்.

இந்த வகைத் திட்டங்களை ஒரு குறுகிய கால சேமிப்பு வாய்ப்பு என்றே சொல்லலாம். அதாவது, அவசர தேவையின்போது உடனடியாக பணத்தை வெளியே எடுக்கும் வசதியும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில், விரும்பிய எந்த நேரத்திலும் முதலீடு செய்யும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. இதில் திரட்டப்படும் தொகை பெரும்பாலும் 'கால் மணி மார்க்கெட்' எனப்படும் குறுகிய கால வட்டிக்கு பணம் வழங்கும் ஏலச் சந்தையிலும், 'ட்ரஷ்ரி பில்ஸ்' எனப்படும் அரசுக் கருவூலம் சார்ந்த வகையிலும், இதையொத்த இன்னும் சில திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். அதனால் இந்த வகை திட்டங்களில், ரிஸ்க் மிக மிகக் குறைவு. பொதுவாக, இந்தத் திட்டங்கள் கம்பெனிகள் தங்கள் கைவசம் உள்ள பணத்தை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யவும், தனிப்பட்ட சிறு முதலீட்டாளர்கள் தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக பொறுத்தமான திட்டத்துக்குக் காத்திருக்கும் காலத்திலும் முதலீடு செய்ய ஏற்றது. இதனால் பொதுவாக இந்த வகை முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் மிக மிக குறைவாகத்தான் இருக்கும். எனினும் சிறுசேமிப்புக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால் கிடைப்பதைவிட இதில் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும். அத்துடன் கம்பெனிகள் தங்கள் பணத்தை கரண்ட் அக்கவுண்ட் எனப்படும் நடப்பு கணக்குகளில் போட்டு வைக்கும்போது கிடைக்க வாய்ப்பில்லாத வட்டி இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளால் சாத்தியமாகிறது

டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்பு திட்டம்


இந்த வகைத் திட்டங்கள் ஈ.எல்.எஸ்.எஸ். என்ற பெயரில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

'ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்' என்னும் இந்த வகைத் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டை பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை திரும்பப் பெற இயலாது. அத்துடன் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குகளில், அல்லது அதைச் சார்ந்த டெரிவேட்டீவ்ஸ் போன்ற மற்றவகைத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் வருமானவரி விதிப்புக் கொள்கைகளின்படி இதில் முதலீடு செய்யப்படும் தொகை முழுமையாக வருமான வரி விலக்கு பெறும். அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை இப்படியான சலுகை பெற வாய்ப்புகள் உண்டு.

டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்பு திட்டம்

இந்த வகைத் திட்டங்கள் ஈ.எல்.எஸ்.எஸ். என்ற பெயரில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

'ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்' என்னும் இந்த வகைத் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டை பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை திரும்பப் பெற இயலாது. அத்துடன் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குகளில், அல்லது அதைச் சார்ந்த டெரிவேட்டீவ்ஸ் போன்ற மற்றவகைத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் வருமானவரி விதிப்புக் கொள்கைகளின்படி இதில் முதலீடு செய்யப்படும் தொகை முழுமையாக வருமான வரி விலக்கு பெறும். அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை இப்படியான சலுகை பெற வாய்ப்புகள் உண்டு.

ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டு முதலீடு திட்டம்

இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை லேட்டஸ்ட் வரவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகை, இந்தியாவில் இல்லாமல் _ சர்வதேச சந்தையில்... மற்ற நாடுகளின் பங்குச் சந்தையில் விற்பனையாகும் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

கடந்த ஆண்டுக்கு முன்வரை இதில் ஒரு வரம்பும் இருந்தது. அதாவது இந்திய நிறுவனங்களில் குறைந்தது 10 சதவிகிதமாவது பங்கு வைத்திருக்கும் சர்வதேச பங்குகளில், அதிகபட்சமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. 'இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகமில்லை' போன்ற சில காரணங்களால் இந்தக் கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டிருந்தன. பிரின்சிபல் குளோபல் ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபண்ட் என்ற திட்டம்தான் இந்தியாவில் தொடங்கிய இவ்வகையைச் சேர்ந்த முதல் திட்டம். ஆனால், கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் இதற்கான வரம்புகளை தளர்த்திவிட்டார். எனவே 'பிரின்சிபல்' திட்டமும் தற்போது புதிய வரம்புகளுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பன்னாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான இது, தனது தாய் நிறுவனத்தின் திட்டமான பிரின்பசிபல் குளோபல் இன்வெஸ்டர்ஸ் எமர்ஜிங் மார்க்கெட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டது. மற்ற பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், இந்த வகையான புதிய திட்டங்களைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளன. இந்திய நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கை, மற்ற நாட்டு பங்குகளிலும் முதலீடு செய்வதன் மூலம் குறைத்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ஏற்ற திட்டம் இது.

இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் எனப்படும் பங்குச் சந்தை குறியீட்டெண் சார்ந்த திட்டம்

இந்த வகை ஃபண்ட்கள் பங்குச்சந்தை குறியீட்டெண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி போன்ற எதாவது ஒருவகை குறியீட்டெண்ணைச் சார்ந்த திட்டங்கள் எனலாம். அதாவது, சென்செக்ஸ் எனப்படும் குறியீட்டெண்ணை கணக்கிட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் 30 பங்குகளில் மட்டும், அந்த பங்குகளுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவத்தின்படி முதலிடப்படும் திட்டம் சென்செக்ஸ் ஃபண்ட் எனப்படும்.

அதேபோல, நிப்டி எனப்படும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் கணக்கிட பரிசீலிக்கப்படும் 50 பங்குகளில் மட்டும் அதே விகிதத்தில் முதலீடு செய்யும் ஃபண்டை நிப்டி ஃபண்ட் எனலாம். இதுபோல நடைமுறையில் இருக்கும் பலவிதமான குறியீட்டெண்கள் அடிப்படையிலும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றன. இதன் சாதக அம்சம் அந்தந்த குறியீட்டெண்ணின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தத் திட்ட முதலீடும் வளரும் அல்லது வீழும் வாய்ப்புகள் இருப்பதுதான். அதனால் பங்குச்சந்தை பற்றி, அதன் சிக்கலான உள்ளடக்கம் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்த மாதிரி பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். பொதுவாக, எந்த குறியீட்டெண் கணக்கிடுவதானாலும், அதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பங்குகள் சம்பந்தப்பட்ட துறையின் முன்னணி பங்காகத்தான் இருக்கும் என்பதால் தவறான, அல்லது மோசமான பங்குகளில் நமது பணம் முடங்கிவிடுமோ என்ற சந்தேகம் கொள்ளத் தேவை இருக்காது.

'கில்ட் ஃபண்ட்ஸ்' எனப்படும் அரசுப் பத்திரங்களில் முதலிடும் திட்டம்.

நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான அரசுப் பத்திரங்களில் பெருமளவும், தேவைப்பட்டால் சிறு அளவில் நம்பகமான சில கம்பெனிகளின் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் திட்டம் 'கில்ட் ஃபண்ட்' எனப்படுகிறது.

'கில்ட்' என்ற இந்தச் சொல்_இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்தது. இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், இதில் கிடைக்கும் வருவாய் பொதுவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்து நடப்பில் இருக்கும் வட்டி விகிதத்தையொட்டியே இருக்கும். பங்கு சார்ந்த திட்டங்களில் கிடைப்பது போல, இதில், பெரிய அளவில் ரிடர்ன் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இதில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு பாதுகாப்பு, மற்ற எந்தத் திட்டங்களை விடவும் அதிகம். அதனால், பொது நல காரியங்களில் ஈடுபடும் ட்ரஸ்ட்கள், பிற சங்கங்கள் உட்பட முதலுக்கான பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக நினைக்கும் தனி நபர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

நன்றி: குமுதம்.காம்

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

நன்றி: குமுதம்.காம்

மியூச்சுவல் ஃபண்ட்களை அவற்றின் அமைப்பு, முதலீட்டு நோக்கம் என பல விஷயங்களைப் பொறுத்து பலவிதங்களாக பிரிக்கலாம். அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

திட்டத்தின் அமைப்பைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1. குளோஸ்ட் எண்டட் திட்டம், 2. ஓப்பன் எண்டட் திட்டம், 3. இன்ட்ரவல் திட்டம்.

1. குளோஸ்ட் எண்டட் திட்டம்:

இந்த வகைத் திட்டம் ஒரு குறிப்பிட்ட கால இலக்கு கொண்டது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், திட்டம் தொடங்கும் நேரத்தில் இதற்கென அனுமதிக்கும் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே இதற்கான தொகையைச் செலுத்தி யூனிட்களைப் பெற முடியும். பொதுவாக, இந்த வகைத் திட்டம் 2 ஆண்டு முதல் அதிகபட்சமாக 15 ஆண்டு வரைகூட காலக்கெடு கொண்டதாக இருக்கும். ஆனால், அந்த காலக் கெடு எவ்வளவு என்பது திட்டம் தொடங்கும்போதே அறிவிக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட கால எல்லை முடியும்போது, அந்த யூனிட்களை வழங்கிய நிறுவனமே, அன்று அந்த யூனிட்களுக்கு இருக்கும் மதிப்பில் அதைத் திரும்பப் பெற்று திட்டத்தை முடித்து வைக்கும். ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் திட்டத்தில் சேர விரும்பிய நபர் ஆரம்ப அனுமதி நாட்களில் தவறவிட்டு விட்டார் என்றால், இடையில் மீண்டும் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது. அதனால்தான் இதை 'குளோஸ்ட் எண்டட்' திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

எனினும் ஆரம்பத்தில் தவறவிட்டவர்கள், பின்னர் இந்த யூனிட்களை பெற விரும்பினால், அதற்கும் சுற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கு சற்று அதிகமாக செலவிட வேண்டி வரலாம்.

இந்த வகை யூனிட்கள் கிட்டத்தட்ட பங்குகள் போலத்தான். அதனால் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, இவை பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரும். அப்போது சந்தையில் நிலவும் விலை கொடுத்து இதை வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக, சந்தையில் விற்பனையாகும் யூனிட்களின் விலை, அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கணக்கிட்டுச் சொல்லும் நிகர மதிப்பை ஒட்டி விற்பனையாகும். பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட பங்குக்கு இருக்கும் டிமாண்ட் சப்ளை இடைவெளி போலத்தான் இதுவும். என்ன விலைக்கு கிடைக்கிறது என்பது அன்றைய சூழலைப் பொறுத்தது. ஆனால், பொதுவாக இது அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிவிக்கும் நிகர சொத்து மதிப்பை விட சற்றே குறைவாக இருக்கும். ஆனால் அந்தத்திட்டத்தின் கால இலக்கு முடிவுறும் நாள் நெருங்க நெருங்க, இந்த இடைவெளி குறைந்து, கடைசி நாளில் ஒரே மதிப்பை எட்டும்.

ஆரம்ப நாட்களில் இதற்கு பங்கு பத்திரங்களைப் போல காகித வடிவச் சான்றிதழ்களை வழங்கி வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் இதை டிமேட் வடிவில் கொடுக்கிறார்கள். அதனால் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் டிமேட் கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். புதிய பங்கு வெளியீட்டில் பங்குகள் வழங்கப்படுவது போலவே, இவர்களது டிமேட் கணக்கில் யூனிட்கள் வரவு வைக்கப்படுகின்றன.

2. ஓப்பன் எண்டட் திட்டம்:

இந்த வகைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால இலக்கு எதுவும் இல்லை. இவற்றில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், தான் விரும்பிய எந்த நேரத்திலும் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேற முடியும். அதாவது, அவர் வெளியேற நினைக்கும் நாளில் அந்தத் திட்டத்தின் யூனிட்களுக்கு என்ன மதிப்போ, அந்த மதிப்பில் _ யூனிட்டை வழங்கிய நிறுவனத்திடமே அதை விற்றுவிட்டு அதற்கான தொகையைப் பெற முடியும். திட்டம் தொடங்கும் ஆரம்ப நாட்களில் இவை இந்த திட்ட யூனிட்களின் முக மதிப்பில் கிடைக்கும். பொதுவாக, இது 10 ரூபாயாக இருக்கும். ஆனால் ஆரம்ப நாட்களில் இதில் முதலீடு செய்ய தவறிவிட்டு பின்னர் முதலீடு செய்பவர்கள், அப்போது அந்த திட்டத்தின் யூனிட்கள் என்ன மதிப்பில் இருக்கின்றனவோ அந்த மதிப்பின் படி பணம் கொடுத்து யூனிட்களை வாங்க வேண்டும். அதை அந்தத் திட்டத்தை வழங்கிய நிறுவனத்திடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம். இப்படி எப்போது வேண்டுமானாலும் அந்தத் திட்டத்தில் நுழையவோ, வெளியேறவோ வசதி கொண்ட திறந்த வகைத் திட்டம் என்பதால் இதை 'ஓப்பன் எண்டட்' திட்டம் என்கிறார்கள். பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்களின் பெருவாரியான திட்டங்கள் இந்த வகையினதாகத்தான் இருக்கின்றன. பெருவாரியான முதலீட்டாளர்களால் விரும்பப்படுவதால் பல நிறுவனங்களும் இவ்வகைத் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்தத் திட்டங்களில் திரளும் பணத்தை முதலீடு செய்யும் நிபுணர்கள் விருப்பம் வேறு.

ஓப்பன் எண்டட் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டாளர், பின்பு, தான் விரும்பிய எந்த நேரத்திலும் அந்தத் தொகையை திரும்பக் கேட்கும் வாய்ப்புண்டு. அதனால், இந்தத் திட்டத்தில் திரண்ட தொகையை முதலீடு செய்யும் நிபுணர் அதை நீண்ட கால திட்டங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துவிட முடியாது. நித்ய கண்டம் பூர்ண ஆயுசு கதைதான்! பணம் கேட்டு எந்த நேரத்திலும் ஓலை வரலாம் என்பதை மனதில் இருத்தி, அதற்கேற்ப திட்டமிட்டுதான் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதிக லாபம் தரும் என்றாலும்கூட, நீண்ட கால திட்டம் என்றால் அதில் முதலீடு செய்ய இயலாத சிக்கல் இந்தத் திட்டத்தில் உண்டு. அதனால் இதில் கிடைக்கும் வருவாய் குறைவாக இருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மாறாக, குளோஸ்ட் எண்டட் திட்டங்களில் இத்தனை ஆண்டுகள், அல்லது மாதங்களுக்கு இந்தப் பணம் கேட்டு ஓலை வராது என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்பதால், அந்தக் கால இலக்குக்கு ஏற்ப திட்டமிட்டு நிபுணர்கள் முதலீடு செய்ய முடிகிறது. எனவே அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய குளோஸ்ட் எண்டட் திட்ட முதலீடுதான் ஏற்றது என்கிறார்கள் நிபுணர்கள்.

3. இன்ட்ரவல் திட்டம்:

ஓப்பன் எண்டட், குளோஸ்ட் எண்டட் எனும் இரண்டு வகைத் திட்டத்தின் அம்சங்களும் இணைத்த திட்டம் இன்ட்ரவல் திட்டம்.

இந்தத் திட்டத்தின் யூனிட்கள் பங்குசந்தையில் பட்டியிலடப்பட்டு விற்பனைக்கு வரும். அதனால் சந்தை விலையில் எப்போதும் இதை வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்து, இந்தத் திட்டம் தொடங்கியபோது அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே யூனிட்களை விற்பனைக்கு கொடுத்தது போல, பின்னாளில் மீண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அந்தத் திட்டத்தின் யூனிட்களை விற்பனைக்கு தரும். அல்லது திரும்ப வாங்கிக் கொள்ளவும் செய்யும். இவ்வாறு எந்தெந்த காலத்தில் நிறுவனம் யூனிட்களை விற்கும் அல்லது வாங்கிக் கொள்ளும் என்பது தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும். அப்போது யூனிட்கள் அந்த நிறுவன கணக்குப்படியான மதிப்பில் விற்பனை செய்யலாம் அல்லது வாங்கலாம். அந்தக் குறிப்பிட்ட நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் அவை பங்குச்சந்தையில் விற்பனையாகும் நிலைக்குச் சென்றுவிடும். பொதுவாக, இந்த மாதிரியான திட்டங்கள் இந்தியாவில் வழக்கத்தில் இல்லை. ஆனால் பல முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.

திட்டத்தின் நோக்கத்தைப் பொறுத்தும் மியூச்சுவல் ஃபண்ட்களை பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை

அ. குரோத் ஸ்கீம்ஸ் எனப்படும் வளர்ச்சித் திட்டங்கள்.

ஆ. இன்கம் ஸ்கீம்ஸ் எனப்படும் வருவாய்த் திட்டங்கள்.

இ. பேலன்ஸ்டு ஸ்கீம்ஸ் எனப்படும் சமனத் திட்டங்கள்.

ஈ. லிக்விட் ஸ்கீம்ஸ் எனப்படும் உடனடித் திட்டங்கள். (மணி மார்க்கெட் திட்டங்கள்)

உ. டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்புத் திட்டங்கள்.

ஊ. ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டு முதலீடு திட்டங்கள்.

எ. இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் எனப்படும் பங்குச்சந்தை குறியீட்டெண் சார்ந்த திட்டங்கள்

ஏ. கில்ட் ஃபண்ட்ஸ் எனப்படும் அரசுப் பத்திரங்களில் முதலிடும் திட்டங்கள்

ஐ. ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் எனப்படும் அதிரடி திட்டங்கள்

ஒ. ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்

ஓ. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் மற்றும்

ஔ. ஸ்பெஷல் ஃபண்ட்ஸ் எனப்படும் சிறப்பு திட்டங்கள்.

நன்றி: குமுதம்.காம்

பரஸ்பரநிதி? இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு.

நன்றி: குமுதம்.காம்

இந்தியாவில் பங்குச்சந்தை தொடங்கியது 1875_ல்! ஆனால் இந்திய அரசு இதற்கு, சட்டப் பூர்வமான அங்கீகாரம் கொடுத்து முறைப்படுத்தியது, 1965_ல்தான். எனினும் பங்குச்சந்தை முதலீட்டின் இன்னொரு வடிவான மியூச்சுவல் ஃபண்ட் 1963_லேயே முளைவிடத் தொடங்கி விட்டது. இந்திய அரசின் முன் முயற்சியால்தான் இது தொடங்கப்பட்டது. அப்போது, இதற்காக 'யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூ.டி.ஐ)' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மத்திய அரசின் ஆசிர்வாதத்தோடு, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிய இந்த அமைப்புக்கு, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி, தனி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தவிர, வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை என்ற சிறப்புச் சலுகை பெற்ற இந்த யூ.டி.ஐ., 1964_ல் தனது முதல் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து பணம் திரட்டியது.

10 ரூபாய் மதிப்பு கொண்ட தனித்தனி யூனிட்களாக வழங்கி, முதலீடு திரட்டிய இந்தத் திட்டம் _ அறிமுகமான ஆண்டின் பெயரிலேயே 'யூனிட் ஸ்கீம் 64' என பெயரிடப்பட்டது. சுருக்கமாக யூ.எஸ்.64! யூ.டி.ஐ. நிறுவனத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியுலகுக்கு வந்தது. இதனால் இந்நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததுடன், யூ.எஸ்.64 யூனிட்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவானது.

அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை யூ.டி.ஐ. ஒரு கோயில் மாடு! ரொம்பப் புனிதமான இமேஜ். யாரும் எளிதில் விமர்சனம் செய்யத் துணிவதில்லை. அதேபோல, லாபகரமாகவும் இருந்து, பணம் போட்டவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தது என்பது வேறு கதை.

இப்படி மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டு, இந்தியாவில் அதைத் தொடங்கி வைத்த யூ.டி.ஐ., 1978_ல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது. 'இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இன்னொரு நிதி நிறுவனம் யூ.டி.ஐ.யை தத்து எடுத்துக் கொண்டது. 1987 வரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் யூ.டி.ஐ.தான் தனிக்காட்டு ராஜா! மருந்துக்குக் கூட, எதிர்க்கடை கிடையாது. அந்த நேரத்தில் யூ.டி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பணம் கிட்டத்தட்ட 6700 கோடி!

இந்தப் போக்கில் மாற்றம், 1987_ல் தொடங்கியது. இந்திய பொதுத்துறை வங்கிகளும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கூட மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதில் ஆர்வம் காட்டினர். அந்த ஆண்டு ஜூன் மாதம் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரில், இது தொடங்கிய ஆறே மாதத்தில், அதாவது டிசம்பரில் கனரா பேங்க் 'கேன் பேங்க்' மியூச்சுவல் ஃபண்ட்' என்ற பெயரில் தனது இளவலை களத்தில் இறக்கியது. இப்படித் தொடங்கிய வளர்ச்சி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் மிக முக்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., தன் பங்குக்கு துண்டு போட்டு இடம் பிடித்தது, 1989 ஜூனில்! அடுத்து பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட், 1989 ஆகஸ்டில்... இந்தியன் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நவம்பரில்... பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 1990ல்...

உயிர்காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்கு கொள்ளும்போது, தானும் களமிறங்கினால் என்ன என்று எண்ணியதோ என்னவோ! ஜி.ஐ.சி. என குறிப்பிடப்படும், உடமைகளுக்கான காப்பீட்டுத் துறையில் இயங்கி வந்த 'ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்' எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனமும் அந்த ஆண்டு டிசம்பரில் தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. ஒரே நேரத்தில், பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தனியாளாய் பயணித்துக் கொண்டிருந்த யூ.டி.ஐ., இப்போது கடுமையான போட்டியைச் சந்தித்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் பேங்க் ஆஃப் பரோடா தனது மியூச்சுவல் ஃபண்டை அக்டோபர் 1992_ல் தொடங்கியது. அடுத்த ஓராண்டில் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் சேர்ந்து சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் தொடங்கியிருந்தன. பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் மேற்பார்வையில் புதிய மாற்றங்கள் தலையெடுக்கத் தொடங்கியிருந்தது. மற்ற பல வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோலவே இந்தியாவிலும் தனியாரின் கட்டுப்பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல விஷயங்களும் தொடங்க ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது.

இதன் பலனாய், மூன்றாவது கட்ட வளர்ச்சி! பொதுத்துறை வங்கிகளும், அரசு சார்ந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் அதிகாரம் செய்து வந்த துறையில், ஸ்மார்ட்டாக 'டை' கட்டிக் கொண்டு மற்றவர்களும் கால் வைக்கத் தொடங்கினார்கள்.

கதவை அகலமாகத் திறந்துவிடுவது என்றானதும், யார் வேண்டுமானாலும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டியிருந்தது. அதனால் அப்போது பங்கு முதலீட்டு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வந்த செபியின் மூலம் புதிய வரவுகளுக்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டன. எல்லாரும் இந்த அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து கொண்டு அதன்பிறகுதான் பணியைத் தொடங்க அனுமதிக்கப்பட்டார்கள். யூ.டி.ஐ. தவிர, இந்தத் துறையில் ஏற்கெனவே இயங்கி வந்தவர்களும் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி பதிவு செய்து கொண்ட முதல் தனியார் துறை மியூச்சுவல் ஃபண்ட் சென்னையில் இருந்து இயங்கிய 'கோத்தாரி பைனியர் மியூச்சுவல் ஃபண்ட்'தான். 1993 ஜூனில் இது பதிவு பெற்றது. அதையடுத்து இன்னும் நிறைய ஃபண்ட்கள் பதிவு பெற்றன. முதலீடு திரட்டின. ஆனால் தனியார் துறை காலெடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மணியடித்தது.

மார்கன் ஸ்டான்லி என்ற பெயரில் தொடங்கிய ஒரு வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் தனது முதல் வெளியீடு மூலம் பணம் திரட்டியபோது, அதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சில இடங்களில் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை. அதனால் விண்ணப்பம் கிடைத்தவர்கள் பலரும் அதில் கூடுதலாக பணத்தைப் போடத் தொடங்கினர். இறுதி நாளுக்குப் பிறகு கணக்குப் பார்த்தால் _ மார்கன் ஸ்டான்லி எதிர்பார்த்ததுபோல, பல மடங்குப் பணம் திரண்டிருந்தது. ஆனால் துரதிருஷ்டம் அந்த யூனிட் விற்பனைக்கு வந்தபோது அதன் மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தது. அதீத ஆர்வம்... எதிர்பார்ப்போடு முதலீடு செய்த பலரும் ஆடிப் போனார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விட, 'தனியார் துறை இங்கே சாதனைகள் நிகழ்த்தும்' என்று வீராப்புப் பேசிய பலரது வாயை அடக்க நடந்த சம்பவம் போல இது அமைந்தது. அதன்பிறகு இந்தத் துறையில் கால் பதித்த இன்னும் பல நிறுவனங்கள் குறித்து கண்மூடித்தனமான நம்பிக்கைகள் வைப்பதில் அர்த்தம் இல்லை என்பது உறுதியானது.

அதேபோல, சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த செபியும் தனது முந்தைய வரையறைகளைத் திருத்தி, 1996_ல் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தது. அதன்பின் இன்னும் பல வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களும் இந்தியாவில் கடை திறக்கத் தொடங்கினார்கள். இன்னொரு புறம் ஏற்கெனவே இங்கே கடை விரித்திருந்த பலரும் இனி தொடர்ந்து தனியாக இயங்குவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தங்களது நிறுவனங்களை மொத்தமாக மற்றவர்களுக்கு விற்பது... அல்லது அவர்களுடன் இணைந்து செயல்படுவது... என தங்களது பாதையை மாற்றியமைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களாகவே முன்வந்து தங்களது போக்கை... திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டது போல, மாற்றியமைத்தே ஆக வேண்டும் என்ற பரிதாப நிலையை யூ.டி.ஐ. எட்டியிருந்தது. அப்போது அதன் யூ.எஸ்.64 போன்ற சில யூனிட்களின் மதிப்பை செயற்கையாக தூக்கி வைத்திருந்தது. இதனால், யூ.எஸ்.64ன் மதிப்பு அதன் மதிப்பு குறைந்திருந்தபோதும், தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி அதை பாதாளத்துக்குத் தள்ளிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால் யூ.டி.ஐ.யின் வேர்கள் செல்லரித்துப் போய் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

அந்த வகையில், ரொம்பவே ஆடி அடங்கியபின் 2003 ஜனவரியில் இந்தத் துறையில் மொத்தம் 33 மியூச்சுவல் ஃபண்ட்கள் இருந்தன. அவை மூலம் திரட்டப்பட்டிருந்த மொத்த பணத்தின் அன்றைய மதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்! இது தவிர யூ.டி.ஐ. மட்டும் தனியாக சுமார் 44 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் யுனியட்களை விற்றிருந்தது.

2003 பிப்ரவரியில் இந்தத் துறையின் அடுத்த முக்கிய நடப்பு தொடங்கியது. அதாவது, இந்தியா இத்துறையின் முதல் நிறுவனமான, 1963_ல் தொடங்கிய யூ.டி.ஐ.க்கு அப்போது தரப்பட்ட சிறப்பு அந்தஸ்து வாபஸ் ஆனது. இதற்காக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனம் அன்று கண்டிருந்த கணிசமான நஷ்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருந்தது. எனவே இனி எந்த ஒரு தனி நிறுவனத்துக்கும் எவ்விதத்திலும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து, இனி யூ.டி.ஐ.யையும் மற்ற நிறுவனங்கள் போலவே சமமான அந்தஸ்தில் வைக்க முடிவு செய்தனர். அதனால் யூ.டி.ஐ. இரண்டு அமைப்புகளாக பிரிக்கப்பட்டது. முதலாவது அமைப்பை, பழைய அதே பெயரில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்று குறிப்பிட்டார்கள். யூ.எஸ்.64 மற்றும், அதுபோல் 'உறுதியான வருவாய்க்கு உத்திரவாதம்' தரப்பட்ட ஒரு சில திட்டங்கள் மட்டும் இதன் கீழ் ஒதுக்கப்பட்டது. ஜனவரி 2003 கணக்குப்படி 29835 கோடி மதிப்பிலான யூனிட் திட்டங்கள் இதன் கீழ் இருக்கும் என பிரிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அமைப்பிற்கு 'யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட்' என்று பெயரிட்டார்கள். மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு செபி குறிப்பிடும் வரையறைகள் அனைத்தும் இந்தப் புதிய அமைப்புக்கும் பொருந்தும் என்றும் முடிவானது. அத்துடன் 2000_ம் ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இந்தப் புதிய அமைப்பின் கீழ் வரும் என்று முடிவு செய்யப்பட்டது. இது மத்திய அரசின் நடவடிக்கைப்படியானது. ஆனால் புதிதாகத் தொடங்கிய சில தனியார் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பிரச்னைகள் தலையெடுத்ததால் அங்கும் ஒரு அதிர்வுக்குப் பிறகு தரை நிரவப்பட்டதில், செப்டம்பர் 2004 இறுதியில் இந்தியாவில் மொத்தம் 29 மியூச்சுவல் ஃபண்ட்கள்தான் என்ற நிலை உருவானது. அவை வழங்கிய 421 திட்டங்களின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கும் சற்று கூடுதலான மதிப்பில் யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. இது, மார்ச் 2006 இறுதியில் 37 பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் எனவும் அவற்றின் மூலம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 862 கோடி ரூபாய் மதிப்புக்கு யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்ற நிலைக்கும் மாறியுள்ளது.

இந்தியாவில் பதிவு பெற்று செயல்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்கள்:

1. ஏ.பி.என். அம்ரோ மியூச்சுவல் ஃபண்ட்

(2. அல்லயன்ஸ் கேப்பிடல் மியூச்சுவல் ஃபண்ட். 2005 செப்டம்பர் மாதத்தில் இது பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

3. பென்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட்

4. பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட்

5. பி.ஓ.பி. மியூச்சுவல் ஃபண்ட்

6. கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட்

7. டி.பிஎஸ் சோழா மியூச்சுவல் ஃபண்ட்

8. டச் மியூச்சுவல் ஃபண்ட்

9. டிஎஸ்பி மெரில்லின்ச் மியூச்சுவல் ஃபண்ட்

10. எஸ்கார்ட்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

11. ஃபிடிலிட்டி மியூச்சுவல் ஃபண்ட்

12. ஃபிரங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்

13. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்

(14. ஜிஐசி மியூச்சுவல் ஃபண்ட். 2005 அக்டோபர் மாதத்தில் இது கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

15. ஹெச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட்

(16.ஐஎல்-எஃப்எஸ் மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஜூலை மாதத்தில் இது யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின.)

17. இந்த் வைஸ்யா மியூச்சுவல் ஃபண்ட்

18. ஜே.எம் ஃபைனான்ஸியல் மியூச்சுவல் ஃபண்ட்

19. கோடக் மஹேந்திரா மியூச்சுவல் ஃபண்ட்

20.எல் .ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்

21. லோட்டஸ் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்

22. மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட்

(23. பிஎன்பி மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஏப்ரல் மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன மடியில் வீழ்ந்தது. இதன் திட்டங்கள் புதிய பெயரைப் பெற்றன)

24. பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட்

25. ப்ரொட்ன்ஷியல் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட்

26. குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட்

27. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

28. சஹாரா மியூச்சுவல் ஃபண்ட்

29. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்

30. ஸ்டாண்டர்ட் சார்டட் மியூச்சுவல் ஃபண்ட்

(31. சன் எஃப் - சி மியூச்சுவல் ஃபண்ட். 2004 மே மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கைக்கு மாறியது. இதன் திட்டங்கள் புதிய நாமகரணம் பெற்றன)

32. சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்

33. டாடா மியூச்சுவல் ஃபண்ட்

34. டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட்


35. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்

(36. ஸூரிச் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட். 2003 ஜூனில் இதை ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கிவிட்டது. ஏற்கெனவே இருந்த திட்டங்கள் புதிய பெயருக்கு மாறிக் கொண்டன)

முதலீடு என்றவுடன் எடுத்த எடுப்பிலேயே கன்னாபின்னா லாபமெல்லாம் தேவையில்லை! கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும், நான் போடும் ஆரம்ப முதலே..., 'ஆடி காற்றில் அடிச்சுட்டு போச்சு!' என்பது போல மொத்த முதலுக்கும் பங்கம் வராமல் இருந்தால் சரி!'' என்று சொல்லும் நபர்களுக்கான ஒரு முதலீட்டு... சேமிப்பு திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் பலரிடம் பரவலாக்கப்படுவதால், தனியொருவர் சந்திக்க நேரும் ரிஸ்க் இதில் குறைகிறது. அவ்வளவு தான்.

அதாவது, நாம் மேலே சொன்னது மாதிரியான நபர்கள் பலர் சேர்ந்து, அவர்களால் முடிந்த தொகையை மொத்தமாக திரட்டி, அந்த தொகையை பங்குசந்தை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்வது. அதே போல, சரியான நேரம் பார்த்து நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் அந்த பங்குகளை விற்றுவிடுவது. இப்படியான தொடர் நடிவடிக்கைகளில் இடையில் கிடைத்த மொத்த லாபத்தையும் சேர்த்து, ஆரம்ப முதலீடு போட்ட அத்தனை நபர்களும் பகிர்ந்து கொள்வது. இது தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில், யார் எவ்வளவு பணம் போட்டார்களே, அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் உறுதியாகிறது. ஒரு வேளை இந்த பணத்தில் வாங்கிய எதாவது ஒரு பங்கில் சிக்கல் ஏற்பட்டு அது விலை குறைய நேர்ந்தால், அதனால் ஏற்படும் மொத்த நஷ்டமும் அந்த திட்டத்தில் முதலீடு செய்த எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் தனியொருவர் சந்திக்க வாய்ப்புள்ள பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது.

இந்த மாதிரி திட்டத்தின் சாதக அம்சம் இது மட்டுமல்ல: இன்னும் பலவகையான லாபங்களும் உண்டு. ஒரு சிறு முதலீட்டாளர் தனியாளாக முதலீடு செய்யும் போது, அவர் செய்யும் முதலீட்டுத் தொகை மிகப் பெரிய தொகையாக இருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நல்ல லாபம் தர வாய்ப்புள்ள, நம்பகமான கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கும்போது, அதில் தேவையான அளவு எண்ணிக்கையில் வாங்க முடியாமல் போகலாம். ஆனால், பல சிறு முதலீட்டாளர்களின் பணம் ஒரே இடத்தில் திரட்டப்பட்டு, அது ஒரு பெரும் தொகையாக மாறும் போது, அதைக் கொண்டு விரும்பிய எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியும்.

இன்னொரு பக்கம்_ இப்படி நிறைய பங்குகள் வாங்கி, அதை நிபுணர்கள் கொண்டு நிர்வகிக்கும்போது, அதற்கான நிர்வாகச் செலவுகளையும் பலரும் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் தனி நபருக்கான செலவு குறைகிறது.

இப்படியாக பலர் ஒன்றாக சேர்ந்து முதலீடு செய்து அதிக லாபம் பெறவும், ரிஸ்கைக் குறைத்துக் கொள்ளவும் பரஸ்பரம் உதவிக் கொள்வதால்தான் இந்த திட்டத்தை தமிழில் ''பரஸ்பர நிதி திட்டம்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன், ஒரு தனிநபர் தனது சேமிப்புப் பணத்தை எங்கே லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக செலவழிக்கும் நேரம், உழைப்பு போன்றவை இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மிகக்குறைவுதான். இதுபோக அனுபவம் உள்ள நிபுணர்களின் கண்காணிப்பும், பராமரிப்பும் நமது பணத்துக்கு கிடைக்கிறது என்பது கூடுதல் அனுகூலம். அதோடு இந்த நிபுணர்களுக்கு என நாம் மிகப் பெரும் தொகை எதையும் கூட செலவழிக்க தேவையில்லை.

இப்படி பல அணுகூலங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் உண்டு. அத்துடன் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகைகளும் உண்டு. அதனால், 'பங்குகளில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கே எனக்கு தேவையில்லை' என நினைப்பவர்கள் பங்குகள் சாராத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் வழிகள் உண்டு. அரசுக் கடன் பத்திரங்கள், பிறவகையான கடன் திட்டங்கள் என ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் நிறையவே இருக்கின்றன.

இன்றைக்கு இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி, நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது. இதனால் மற்ற பல வகையான முதலீடுகளை ஒப்பிடும்போது இந்த வகையான முதலீடுகளில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை:

1. நுட்பம் தெரிந்த திறமையாளர்களின் நிர்வாகம்.

2. ஒரே இடத்தில், திசையில் முடங்கிப் போகாமல், பல வழிகளில், துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

3. கண்காணிப்பதும், நிர்வகிப்பதும் எளிது, குறைந்த நேரம் செலவிட்டால் போதும்.

4. அதிக லாபத்துக்கான வாய்ப்பு.

5. குறைந்த நிர்வாகச் செலவு.

6. நினைத்தபோது மீண்டும் காசாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

7 திரட்டிய தொகை எங்கே முதலிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை.

8 விரும்பியபோது ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறிக்கொள்ளும் எளிய வாய்ப்பு.

9. தேர்ந்தெடுக்க ஏராளமான திட்டங்கள்.

10. ஏராளமான வரிச்சலுகைகள்.

11. அதிக நம்பத்தன்மை (செபி போன்ற அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால்).

நன்றி: குமுதம்.காம்

Friday, October 19, 2007

பரஸ்பரநிதி - ParasparFund

அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை நண்பர்கள் பலரும் நம் அனைவருக்கும் பரஸ்பர நிதி (Mutual Fund) தொடர்பாக பல கட்டுரைகளும், தொடர்களும், விளக்கங்களும் எழுதி வந்திருக்கின்றனர். ஆனால், இன்னும் நம்மில் பலர் ஏதோ ஒரு காரணத்தை நம்முள்ளேயே நினைத்துக்கொண்டு - எங்கு வாங்கலாம், எப்படி வாங்கலாம், எதை வாங்கலாம், என்ன கிடைக்கும், என்ன பிரச்னை என்று பல கேள்விகளை உள்ளுக்குள்ளே வினவிக்கொண்டு நகர்ந்து வந்திருக்கிறோம். அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, நம்மில் ஒவ்வொருவரும், நமக்கு ஏற்றவகையிலான முதலீட்டை பரஸ்பரநிதியில் செய்ய, உங்கள் கைப்பிடித்து வழி நடத்த உங்களில் ஒருவன் கிளம்பியிருக்கிறேன்!

ஆம், பரஸ்பர நிதியின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக இணைந்துள்ளேன். இனி நீங்கள் என்னை நேரடி தொடர்புகொள்வதன் மூலம், உங்கள் தேவைகளை அறிந்து சேவையாற்ற காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு-சிங்கை.